Sunday, September 25, 2011

புகைப்பழக்கம்: பெண்களுக்கு ஆபத்து அதிகம்


புகைப் பிடிக்கும் பழக்கத்தை ஆரம்பிக்கின்ற பெண்களுக்கு இருதய நோய் வரக்கூடிய ஆபத்தானது அப்பழக்கத்தை ஆரம்பிக்கும் ஆண்களை விட அதிகமாக இருக்கிறது என முப்பது வருட ஆராய்ச்சிகளில் மீளாய்வு கூறுகிறது.
புகைப்பிடிக்கும் பெண்

இருபத்து நான்கு லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளை வைத்துப் பார்க்கையில் புகைக்கும் ஆண்களை விட புகைக்கும் பெண்களுக்கு இருதய நோய் ஆபத்து 25 சதவீதம் கூடுதலாக இருப்பதாக லான்செட் என்ற மருத்துவ சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு அதிக ஆபத்து வருவது ஏன் என்பதற்கான காரணங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.
சாதாரணமாக ஆண்களை விட பெண்கள் குறைந்த எண்ணிக்கையிலான சிகரெட்டுகளைத்தான் பிடிக்கிறார்கள் என்றாலும், அவர்களுக்கு இருதய நோய் ஆபத்து அதிகம் என்ற கண்டுபிடிப்பு ஒரு எச்சரிக்கையாக வந்துள்ளது என பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் என்ற இருதய நோய் ஆராய்ச்சி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
உலகில் அதிகம் பேரைக் கொல்லும் நோய் இருதய நோய்தான் என்றும் ஒவ்வொரு ஆண்டும் இந்நோயின் காரணமாக ஏழுபது லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
ஆண் பெண் என இருபாலாரிலுமே புகைப்பழக்கம் இல்லாதவர்களோடு ஒப்பிடுகையில் புகைப்பவர்களுக்கு இருதய நோய் வருவதற்கான ஆபத்து இரண்டு மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment