
விபத்துப் பகுதியில் மீட்புப்பணி
தமிழ்நாட்டில் அரக்கோணம் அருகே செவ்வாய்க்கிழமை இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 9 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 86 பேர் காயடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அரக்கோணத்தை அடுத்துள்ள சித்தேரி அருகே செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 9.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது.
அரக்கோணத்தில் இருந்து காட்பாடி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், சித்தேரி அருகே சிக்னலுக்காகக் காத்திருந்தபோது, சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து வேலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த புறநகர் மின்சார ரயில் அதே பாதையில் சென்று பின்புறமாக மோதியது.
இதில், நின்றுகொண்டிருந்த பயணிகள் ரயிலின் மூன்று பெட்டிகளும், புறநகர் மின்சார ரயிலின் இரு பெட்டிகளும் கவிழந்துவிட்டன. அதனால், அந்த ரயில்களில் இருந்த பலர் படுகாயமடைந்தனர். இரவு ஒரு மணிவரை, 9 பேரின் சடலங்கள் மீ்ட்கப்பட்டதாகவும், அவர்களில் இருவர் பெண்கள் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்த 86 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் படுகாயமடைந்திருப்பதாகத் தெரிகிறது.
மீட்புப்பணி பாதிப்பு
விபத்து நடந்த பகுதியில் பலத்த மழை பெய்வதால், மீட்புப்பணி சற்று நேரம் பாதிக்கப்பட்டதாக அங்கிருக்கும் ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதையடுத்து, நள்ளிரவு 12.30 மணியளவில் மீட்புப்பணிகள் நிறைவடைந்தன.
விபத்து காரணமாக, சென்னையிலிருந்து செல்ல வேண்டிய பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன. விபத்து பற்றிய தகவல்களை அறிய, 91-44-25357398, 91-44-25347771 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
நிவாரணம்
இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி அறிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரமும் வழங்கப்படு்ம் என்றும் அறிவித்துள்ளார்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், மனிதத் தவறாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் எச்சரித்துள்ளார்.
No comments:
Post a Comment