இலங்கையில் இடம்பெற்ற ரயில் விபத்தொன்றில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 33 பேர் காயமடைந்துள்ளனர்
ரயில் சாரதி, உதவியாளர் மற்றும் வெளிநாட்டவர் பலி
கொழும்பிலிருந்து பொல்காவலை நோக்கி சென்றுகொண்டிருந்த ரயில் ஒன்று அதே திசையில் கண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொல்காவலை நோக்கிச் சென்ற ரயிலின் சாரதியும் அவரது உதவியாளரும் வெளிநாட்டவர் ஒருவருமே விபத்தில் கொல்லப்பட்டுள்ளதாக ரயில்வே பேச்சாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் குருநாகல் மாவட்டத்தில் அளவ்வ சந்தி என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கண்டி நோக்கிச் சென்ற ரயிலின் சுற்றுலாப் பயணிகளுக்கான பார்வையாளர் பெட்டி முற்றாக சேதமடைந்துள்ளதாக விபத்து நடந்த இடத்திலிருந்த ஊடகவியலாளர் பிபிசிக்குத் தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் அளவ்வ மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரயிலின் சேதமடைந்த பெட்டிகளுக்குள் பயணிகள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில் மீட்புப் பணிகள் தொடர்வதாக சற்றுமுன்னர் கருத்துத் தெரிவித்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment