Tuesday, November 1, 2011

கவிதை

ரூகுல் ரஸ்மி கவிதைகள்


(....)
மண்டலங்கள் பல தான்
மறைந்தோடி விட்டன
மண்டலம் மண்டலமாக
உள்ளிழுத்தும் வெளியிலிட்டும்
விரயமாக்காவிட்டாலும் - கொஞ்சம்
விரைவாகத் தான் வளியை
வீசியெறிந்து செலவழிக்கிறோம்
அச்சு சுற்ற வேண்டுமென்றோம்
அடுப்பெரிக்கவும் வேண்டுமென்றோம்
அரைக் காசு கூட செலவில்லையென்பதாலோ
அபரிமிதமாகவே நுகர்ந்து தள்ளுகிறோம்

ஆளைக் கொன்றோம் - அதிகமதிகம்
அழிவுகளையும் ஏற்படுத்தினோம்
அரைநொடியையேனும் ஒதுக்கி – வளியின்
ஆயுள் நீடிக்க என்ன செய்தோம்?

கரியமிலம் கோபிக்கக்
கொதித்தழுகும் புவி உருண்டையின்
ஏக்கக் கண்ணீராய்
அமில மழை!

குடை பிடித்து ஒதுங்குவதால் மட்டும்
குறைந்து விடப் போவதில்லை
நாளைய தலைமுறையைக் குறிவைத்திருக்கும்
காலநிலை அணர்த்தம்.

எழுபத்தெட்டு விகித
அருதிப்பெரும்பான்மை அதிகாரத்தில்
செங்கோலோச்சும் நைத( அ)ரசனை
நாசுக்காய் புறந்தள்ளிவிட்டு
கடைநிலைச் சிறையில்
இறைவன் அடைத்திருந்த
காபனீரொட்சைட்டுக்கு
கள்ளப்பட்டாபிஷேகம் 

விளைவு.....
பச்சைவீடு அரசனின் சின்னவீடாக
கொடுங்கோலுக்கு மறுபெயர்
குளோபல் வார்மிங் என்றானது.


(......)
 











தன்கூட்டைப் போல் தலைகீழானது
தூக்கனாங்குருவி வாழ்வு


தன்னுணவைத் தான்தேடியது
தானாகவே தயைகூர்ந்தது


உழைக்காத தந்தைக்கு
மாதிரியானது உழைப்புக்கு


தன்மானத்தோடு வாழ
தன்குஞ்சுக்கும் பழக்கியது


தட்டிக்கேட்கத் தலைப்பட்டது
தட்டிப்பறிக்க வெட்கப்பட்டது


நேரத்துக்குக் கூடுவந்தது
நேரத்துக்கு முன் துயிலெழுந்தது


தன்வீட்டைப் போல் தலைநிமிர்ந்தது
மனித வாழ்வு

(.....)
உன் முரண் எனக்குப் பிடிக்கும்,
நீ வெட்டி வேறாக்குவதே
ஒட்டித் தைக்கத்தானே



வேதனையிலும் சாதனையிலும்

கண்ணோடு கைகோர்த்தாய்


வெட்டுக்காயம் பட்டபோதுதான்



கண்துடைப்பென்று தெரிந்தது



















பஸ்லி ஹமீட் கவிதைகள் 


எதிரிகளென்று யாருமில்லை
எல்லையில் நிற்கிறது
முள் வேலி.....!

நகர்ப்புறத்து யன்னல்களும்
கற்றுக் கொண்டன,
அவளால் இன்னும் முடியவில்லை
சேலை அணிவதற்கு....!

தடவிக் கொடுத்ததுதான் தாமதம்
அடங்கிப் போனது அடம்பிடித்த
ஆடைகள்...!

உறவென்று
உன்னை நான் சொல்வதுமில்லை
ஒரு பொழுதும் என்னைப் பிரிந்து
நீ செல்வதுமில்லை....!

ஊருக்குள் ஒரு சிக்கல்
வந்தது - ஆனால்
ஊராரின் சிக்கல்கள்
தீர்ந்தது....!

ஒற்றைச் சிறகுடன் பறந்தது
ஒரு நொடியில் தரையில்
விழுந்தது....!

ஒரு வலதுசாரி
ஒரு இடதுசாரி - இருவரும்
இணைபிரியாத
பாதசாரி....! 

 


அச்சேறப் போவதில்லை
அறிந்திருந்தும்
ஆர்வத்துடன் எழுதுகிறார்கள்
டயரி...!

உற்சாகமாக வெளியே வந்தேன்
உங்கள் கண்பட்டதுதான்
பாருங்கள் - மூலையில்
முடங்கிக் கிடக்கிறேன்....!


நாங்கள் வயிறாறும் போதெல்லாம்
வயிறெரிந்து வாடுகிறது
அடுப்பு....!


துருவித் துருவி எடுத்தேன்
கடைசிவரை ஒன்றை மட்டுமே
உளறியது....!


ஊரெங்கும் வேர் படர்ந்தது
மரத்தினைத் தேடினேன்
மாடிகளையே கண்டேன்...!


கலங்கியபோது


கண்ணீரைத் துடைத்தாய்

களைத்தபோது

வியர்வையைத் துடைத்தாய்.....!